திருத்தம் சரவணன்,
ஏற்கனவே உங்களின் ஓரிரு கட்டுரைகளைப் படித்ததில் பெற்ற
அதிர்ச்சியினால் நான் உங்களின் பதிவு பக்கம் போவதேயில்லை.
கண்ணகி எப்படி எரித்தாள் என்ற ஆய்வு என்றதும் அடக்க முடியாத
ஆர்வத்தால்தான் போய்ப்படித்தேன்.
படித்ததும் எனக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
நல்லவேளை, "கண்ணகிக்கு நீளமான வால் இருந்தது; எங்கே போனாலும்
அதனைச் சுருட்டிக் கையில் எடுத்துப் போவாள் - அந்த வாலில் எண்ணெய் ஊற்றி தீ
வைத்து மதுரையை மூன்று சுற்றுச் சுற்றி எரித்தாள்; ஏனென்றால் முலை என்றால் வால்
என்று பொருள்" என்று சொல்லாமல் இருந்தீர்களே, என்ற நிம்மதியில் இதனை
எழுதுகிறேன்.
இலக்கியத் தேடல் என்பதே ஒரு மாற்றுப் பார்வைதான். அந்தத் தேடலும் எண்ணமும்
உயரியது. அதில் குறை இருக்கலாம்; ஆயினும் ஊக்கத்தைப் பாராட்டலாம்.
ஆனால் உண்மையோடு கலந்த பொறுப்பு சற்று இருக்க வேண்டும்.
மாற்று மாற்று என்ற ஒரு போலி அலைதலாக இருத்தல் கூடாது.
இலக்கியம், சிலப்பதிகாரம் என்று வாய் வழி மட்டும் கேட்கும்
அப்பாவிகள் உங்கள் பதிவைப் படிக்கிறார்கள் என்பதும்,
நீங்கள் தரும் தவறான பொருள்கள் அவர்களின் மனங்களில் தங்கும்
என்பதாலும் அடியேன் இதனை எழுதுகிறேன்.
அது மட்டுமல்ல எப்படியும் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழர்
இலக்கியங்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டித் திரியும்
மின் தமிழ்க் கூட்டத்தின் பெருக்கம் அதிகமாகி வருகிறது என்பதாலும்
இதனை எழுத வேண்டி உள்ளது.
நிற்க:
"இடமுலை கையால் திருகி" என்று வருகிறதே,
முலை = கண் என்று
கொண்டால், கண்ணைத் தோண்டி, அல்லத் தொட்டு என்று வரவேண்டுமே!
கண்ணைத் திருகி வெளியே எடுப்பார்கள் என்று
எங்கும் இருக்கிறதா?
காதைத் திருகுவாங்க. கையை முறுக்குவாங்க. திருகாணி என்ற சொல்லை
யாரும் அறியாமல் இருக்க முடியாது. அந்தத் திருகல் என்ற வினையை
கண்ணைத் தோண்ட பயன்படுத்த முடியுமா?
மட்டு ஆர் மறுகின் மணிமுலை = கள் குடிக்கும் வண்டு போன்ற கண்மணியை உடைய கண்
ஏங்க, எந்தக் கேணையனாச்சும், ஒரு பொம்பளை தன்னோடு
கண்ணைத் தோண்டிஅல்லது நோண்டி கையில் வைத்துக் கொண்டு,
அடங்காத் துயரத்துடன் ஊனமுற்று குருதி கொட்ட நிற்கும் அந்த
நொள்ளைக் கண்ணியின் கண்ணின் அழகைப் பாடுவானா?
கவிஞன் என்றால் அறிவுடையவன் என்ற ஒரு பொருள் உண்டு.
மப்படித்துவிட்டு மூக்குச்சளிக் கவிதைகள் பெய்கிற கவிஞர்
வகையினர் அல்லர் சிலம்பாசிரியர்.
மறுகல் என்பது மயங்கல் என்ற பொருள் தரக்கூடும் என்பதால்
வண்டு என்று பொருள் மயங்கச் செய்யக் கூடாது.
மட்டு ஆர் மறுகு:
நான் சுருக்கமாக எழுதுகிறேன்.
மதுரையை மூன்று முறை சுற்றி வருபவள் எங்கே நின்று நெஞ்சைப் பிய்த்துக்
கொள்கிறாள்? என்பதைச் சொல்வது அவ்விடம்.
இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு. இரண்டிற்கும் பட்டமன்றமே நடத்தலாம்.
1) மட்டு = எல்லை, அளவு; Boundary, Limit. மறுகு என்றால் வீதி, தெரு, புறம்
என்று வரும்.
ஒரு ஊரை மும்முறை சுற்றுகிறாள் என்றால் எப்படிச் சுற்றினாள் என்று
யோசிக்க வேண்டாமா? இன்று சென்னையை மும்முறை சுற்ற வேண்டும் என்றால் எங்கே
ஆரம்பித்து எங்கே முடித்து எங்கேயிருந்து
கண்ணை நோண்டி எறிவது? :-( (பாண்டியன் bypass road, outer ring road, inner ring
road போன்றவை எல்லாம் கட்டி வைத்திருந்தானா என்று ஆராயுங்கள்; வசதியாகச்
சுற்றுவதற்கு)
மும்முறைச் சுற்றியவள், ஆங்கே அவ்வூருக்குப் புற எல்லையாக
(மட்டு) அமைந்திருந்த ஊர் அல்லது வீதி அல்லது தெருவிடம் நின்று
தனது நெஞ்சைப் பிழிந்திருக்கக் கூடும்.
2) ஊரை மும்முறைச் சுற்றி வஞ்சினத் துயரோடு ஒருத்தி
அலைகிறாள்; அவள் ஒரு இடத்தில் உச்ச கட்டத் துயர் அடங்காது
தனது மாரையும் திருகி எறிகிறாள் என்றால் ஊருக்கு வெளியே
யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் போய் நின்று கொண்டா செய்வாள்?
அல்ல. துயரம் என்பது யாரும் இல்லா இடத்தில் பொங்காது. அந்தத் துயரை
உணரக் கூடியவர் இருக்கும் இடத்தில்தான் பொங்கும். இழவு வீட்டில் பார்த்தால்
தெரியும். யாராவது நெருங்கியவர் வரும் போதுதான் மற்ற நெருங்கியவரிடம் இருந்து
அதிக அழுகுரல் வரும்.
அப்படி, அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்த, உணர்ந்து கொண்ட,
(இவள் இன்னார் என்று அறிந்து கொண்ட என்றும் சொல்லலாம்), இவள் இத்தகையள் என்று
அறிந்து கொண்டு, இவளின் துயரைக் கண்டறிந்து
கலங்கியோர் அதிகம் வதியும் தெருவில் அல்லது இடத்தில் அல்லது வீதியில்
அல்லது புறத்தில் நின்று தனது மணிமுலையை வட்டிக்கிறாள்.
மட்டு என்றால் "உணர்ந்து கொள்ளக் கூடிய, குத்துமதிப்பாய் அறியக் கூடிய, To
Estimate roughly, To Guess" என்ற பொருள்கள் உண்டு. பார்க்க சென்னைப் பல்கலை
அகராதி.
மட்டம் பார்க்கிறது என்று சொல்வார்களே அபப்டி - அந்தச் சூழலின் மட்டத்தை
நன்கு உணர்ந்தார் பலர் இருக்கும் இடம் என்று பொருள் படும். அவர்கள்
சொல்லியே அவள் முலையைத் திருகி எறிந்தது பிறருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.
எனக்கு உகப்பான பொருள் இதுவே.
இவ்விரண்டையும் தாண்டி, ஒரு காப்பியஞ் செய்யும் கவிஞருக்கு
நிகழ்வின் தொடரைச் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பது உண்டு.
சிலம்பாசிரியர் மட்டு ஆர் மறுகின் என்று சொல்லவில்லை என்றால்
(மேற்படி 2ஆவது பொருளில்) அவள் முலையைத் திருகி எறிந்ததை
யார் பார்த்தார் என்ற கேள்வி எழக்கூடும்? அந்தக் குறிப்பு காப்பியத்தில்
இருந்தாலும் இது மூல முக்கியமான இடம் ஆகும்)
ஆகவே, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதி
முலையைக் கண்ணாக்கி, மறுகை வண்டாக்கிச் செய்யும் திருகு தாளங்கள்
வேண்டாம்.
மட்டு, மறுகு என்பதைத் தாண்டி மணிமுலைக்கு வருவோம்.
உங்கள் கூற்றுப் படி, முலை = கண் என்றால் மணி என்ற சொல்லை
ஏன் ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார். கண்மணி வேறு மணிக்கண் வேறு.
மணிமுலை என்பதற்குப் பக்கம் பக்கமாக எழுதக் கூடியவர்கள் உண்டு.
மணி என்றால் மாணிக்கம் என்றும் பொருள் உண்டு. மாணிக்கம் போன்ற
சிவந்த முலை என்றா பொருள்? இல்லை.
இலக்கிய ஆய்வில் அதைச் சரியாக உணர வேண்டுமானால் ஒருவர்
மணிக்கட்டு, மணத்தக்காளி (மணித்தக்காளி) என்ற இரண்டையும்
ஆழ்ந்து உணர வேண்டும். கூடவே மணிக்குடல் என்றால் என்ன என்று அறிந்து
கொள்வதில் தவறில்லை.
ஆகவே மட்டு, மறுகு, மணிமுலை ஆகியவற்றிற்கு ஆழ்ந்த ஆனால் மிகத் தெளிவான
பொருள்கள் உண்டு.
அதெல்லாம் வேண்டாம் - நீங்கள் திருத்துவதுதான் சரி என்றால்,
"முலை என்றால் கண் - சரி, "முலைக்கண்" என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
என்று யோசித்துக் கொண்டே செய்யுங்கள்?
எந்தச் சொல்லை எங்கே எப்படி பொருள் காண்பது என்பது ஒரு கலை.
அந்தக் கலைச்சிறப்பு பேரறிஞர்களிடம் உண்டு. நமக்குப் புரியவில்லை
என்பதால் இட்டத்திற்கும் திருத்தம் செய்து கொண்டு திரிவது
தமிழ்ப் பெருங்கொலைகளுள் ஒன்றாகும்.
ஏற்கனவே நீங்கள் திருக்குறளைத் திருத்துகிறேன் பேர்வழி என்று
செய்யும் அட்டூழியம் தாங்கவில்லை.
இணையத்தில் மிக நல்ல அறிஞர்கள் இருக்கிறார்கள்.
அவர்களிடம் உங்கள் கட்டுரகளைக் காண்பித்து உங்கள் தேடலை
ஆற்றுப் படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்லது. அதற்கு இது
நல்ல நேரம்.
தமிழ்நாட்டில் "திருத்தம் குழவிச்சாமி" என்று ஒருவர் தமிழ் எழுத்துக்களே
தப்பு. அவற்றிற்கு மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தப் போகிறேன்
என்று தமிழ்நாட்டில் கூத்தடித்து வருகிறார். நீங்கள் செய்யும் திருத்தமும்
அதே அடாவடி வகையைச் சேர்ந்தது.
நாக.இளங்கோவன்
2010/2/7 திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com>
> அன்பு நண்பர்களே,
> கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியைப் பற்றிப் பல குழப்பங்களும் கேள்விகளும்
> இதுவரை இருந்து வந்தன.
> அவற்றுக்கு விடைகாணும் வண்ணமாக ஓர் ஆய்வுக் கட்டுரையில் விளக்கம்
> கொடுத்துள்ளேன்.
> அதன் சுட்டி இதோ கீழே:
> http://thiruththam.blogspot.com/2010/02/blog-post.html
> அன்பர்கள் படித்து மகிழலாம்.
> --
> அன்புடன்,
> திருத்தம் பொன்.சரவணன்
> ........................................................................... ..........
> நல்லவை செய்தல் ஆற்றீர் ஆயினும்
> அல்லவை செய்தல் ஓம்புமின்!
> ........................................................................... ...........
> தமிழில் திருத்தங்களைக் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com
> --
> "தமிழ் பிரவாகம்"
> "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
> Piravakam@googlegroups.com